சுட்டுக்கொல்லப்பட்ட பின்லேடனின் 3 மனைவிகளை பாகிஸ்தான் அரசு கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பின்லேடனின் தீவிரவாத நடவடிக்கைகள், அல்கொய்தா இயக்கம் பற்றிய தகவல்களை அறிய முடியும் என கருதியது, இதற்கிடையே அவர்களிடம் விசாரணை நடத்த பாகிஸ்தான் அனுமதி அளித்து விட்டது என்ற தகவலும் வெளியானது.
ஆனால், இதை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுதுறை செயலாளர் சல்மான் பஷீர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சுட்டுக்கொல்லப்பட்ட பின்லேடனின் மனைவிகளிடம் விசாரணை நடத்துவது குறித்தோ, அவர்களை ஒப்படைப்பது குறித்தோ அமெரிக்கா முறைப்படி கேட்கவில்லை. அதற்காக பாகிஸ்தான் அரசை இதுவரை அணுகவில்லை என்று தெரிவித்தார். ஆனால் அமெரிக்க அதிகாரிகளோ இதற்கு நேர்மாறான கருத்தை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பென்டகன் ராணுவ தலைமையகத்தில் செய்தி தொடர்பாளர் டேவ்லபான், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பின்லேடன் மனைவிகள் குறித்து விசாரணை நடத்துவது குறித்த தகவல்களை மறுக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ இல்லை.
மேலும் அவர் கூறும் போது, இது குறித்து பாகிஸ்தான் அரசுடன் பேசி வருகிறோம். ஆனால் அங்கிருந்து திட்டவட்டமான பதில் இன்னும் வரவில்லை. அதே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் உலகின் எந்த பகுதியிலும் தீவிரவாதம் நடந்தாலும் அதை ஒழிப்பதில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என்று தெரிவித்தார்.

1 கருத்துகள்:
செய்திகளை விட்டுவிடுங்கள் காமெடி,சினிமா பற்றி எழுதுங்கள்
கருத்துரையிடுக