கருணை இல்லத்துக்கு இலவசமாய் வழங்கிய இடத்தை ராதாரவி திருப்பி கேட்கிறார். இதனால் அங்கு தங்கி இருக்கும் ஆதரவற்ற முதியவர்கள் தெருவுக்கு வரும் நிலை ஏற்படுகிறது.
அருண் சிறு வயதில் இருந்தே குத்துச் சண்டையில் ஆர்வமாய் இருக்கிறான். பக்கத்தில் பெரோஸ்கான் நடத்தும் குத்துச்சண்டை பயிற்சி மையத்துக்கு போய் மறைந்திருந்து பயிற்சி பெறுகிறான். அப்போது தேசிய குத்துச் சண்டை போட்டிக்கான அறிவிப்பு வருகிறது. வெற்றி பெறுபவருக்கு வீடு பரிசாக வழங்கப்படும் என்கிறார்கள்.
கருணை இல்லத்துக்கு அவ்வீட்டை பெற்றுத் தர குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்க தயாராகிறான் அருண். அவன் ஆர்வத்தை புரிந்து பெரோஸ்கான் குத்துச்சண்டை பயிற்சி அளிக்கிறார். அருண் ஆசை நிறைவேறியதா? என்பது கிளைமாக்ஸ்...
கருணை இல்லவாசிகளின் உருக்கமான வாழ்க்கை, அம்மா சென்டிமெண்ட், பள்ளி மாணவர்களின் நட்பு விஷயங்களை கோர்த்து காட்சிகளை கச்சிதமாக நகர்த்துகிறார் இயக்குனர் பெரோஸ்கான். ஆதரவற்றோர் இல்லவாசிகளுக்கு துணையாக இருக்கும் அனாதை சிறுவன் அருண் பாத்திரத்தில் அஜ்மல்கான் அம்சமாய் பொருந்துகிறார்.
மாணவியின் கையை பிடித்து இம்சை செய்யும் ரவுடி மாணவனை ஓட ஓட விரட்டி நொறுக்குவதில் வேகம். கடலில் விழுந்து நண்பன் பலியாவது கண்டு கதறுகையில் மனதில் இறங்குகிறார். குத்துச் சண்டை போட்டியில் வீரர்களுடன் மோதுவதில் ஆக்ரோஷம்.
நாயகி திவ்யா நாகேஷ் பிரியமான தோழி. அவர்களுக்குள்ள நட்பு பிரசமற்று நகர்வது ஜீவன். குத்துச் சண்டை பயிற்சியாளராக வரும் பெரோஸ்கான் ஈர்க்கிறார். ராதாரவி, பாலா சிங், பாய்ஸ் ராஜன், ரிஷிராஜ், ஆதித்யா, நீலன் போன்றோரும் உள்ளனர்.
காட்சியோட்டத்தில் நாடகத்தனம் எட்டி பார்ப்பது நெளிய வைக்கிறது. கிளைமாக்ஸ் குத்துச்சண்டை விறுவிறுப் பின் உச்சம். தினா இசையில் அம்மா சென்ட்மெண்ட் பாடல் மனதை தொடுகிறது. கிளைமாக்ஸ் சண்டையை மோகனராமன் கேமரா பரபரவென பதிவு செய்துள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக